தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தின் கோமதி மாரிமுத்து தங்கம் வென்று அசத்தினார்.
ஆசிய தடகளப் போட்டியில் 800 மீ., ஓட்டத்தில் (2:02.70) தங்கப் பதக்கம் வென்றார். இதில் மூன்றாவது இடத்தில் இருந்த கோமதி கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றார்.
இந்நிலையில், தற்போது இவர் ஊக்க மருந்துப் சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோமதியின் ‘ஏ’ மாதிரி ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார் என்றும், மேலும் அடுத்த நிலை சோதனையான இவர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் இவருக்கு 4 ஆண்டு தடைவிதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக இந்தியத் தடகளம் சார்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. இதற்கிடையில், கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டை கோமதி மறுத்துள்ளார். இதுகுறித்து கோமதி கூறுகையில், ‘ இந்த விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தவேண்டும் என தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன். என் வாழ்நாளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை நான் பயன்படுத்தியதில்லை.
ஆசிய தடகளப் போட்டியின் போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான் பயன்படுத்தினேன். ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி தவறு. ’ என்றார்.
Mobile AppDownload Get Updated News