தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேட்மிண்டன் விளையாட்டுத் துறையில் கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள் ஆகியவற்றை ஏழை எளியவர்களுக்கும் வழங்கும் சேவையை அளிக்கும் இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில், கொடாக் மகேந்திரா வங்கியின் சார்பில் இணை இயக்குநர் தீபக் குப்தாவும் புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியின் சார்பில் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர் கோபிசந்தும் கலந்துகொண்டனர்.
விளையாட்டு பயற்சி மையங்கள் அமைப்பது, விளையாட்டுக்கான உபகரணங்கள், உணவு மற்றும் இருப்பிட வசதிகள் வழங்குவது, உடற்பயிற்சிக் கூடம், ஓடுதளம், நீச்சல் குளம் ஆகிய சேவைகளை அளிப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
"நீண்ட கால செயல் திட்டத்துடன் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கிறோம். உலகத்தரம் வாய்ந்த பேட்மிண்டன் வீரர்களை உருவாக்க இந்த முயற்சியை அறிவித்துள்ளோம்." என நிகழ்ச்சியில் பேசிய கோபிசந்த் கூறினார்.
தீபக் குப்தா பேசும்போது, எந்த ஒரு குழந்தையோ இளைஞரோ தரமான கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Mobile AppDownload Get Updated News