ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்ப்பால் சிங் மைதானத்தில் மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா பயிற்சி பெற்று வந்தார். 25 வயதான விஷால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடியவர். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பயிற்சி மேற்கொண்ட இவர் மைதானத்தின் அலுவலகம் அருகில் மயங்கி கிடந்துள்ளார்.
அவரை மீட்ட உள்ளூர் மக்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விஷால் மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மழையினால் மைதானத்தில் உள்ள கட்டடங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, மின்சாரம் தாக்கி விஷால் இறந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
வீரர் விஷாலின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக ஜார்க்கண்ட் மல்யுத்த சங்கத்தின் தலைவர் போலா நாத் சிங் தெரிவித்தார். மேலும், விஷாலின் நான்கு தங்கைகளில் ஒரு தங்கைக்கு வேலை கிடைக்கும் வரை 10,000 ரூபாய் மாத உதவித்தொகையை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1978ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்படவில்லை என்றும் மிகவும் பழையதாகிவிட்ட கட்டிடத்தை இனியாவது புதுப்பிக்க நடிவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Mobile AppDownload Get Updated News