18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தாவில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய ஒலிம்பிக் சங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
36 வகையான போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் 277 வீரர்கள், 247 வீராங்கனைகள் உட்பட 524 பேர் இடம் பிடித்துள்ளனர். அதிகபட்சமாக தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள 52 பேர் உள்ளனர்.
ஹாக்கி அணியில் 36 பேரும் வாலிபால் அணியில் 28 பேரும், துப்பாக்கி சுடுதலில் 28 பேரும், கபடி அணியில் 24 பேரும், பேட்மிண்டன் அணியில் 20 பேரும், கராத்தே அணியில் 2 பேரும் இருக்கிறார்கள்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி சார்பில் 541 பேர் தேர்வானார்கள். 28 போட்டிகளில் பங்கேற்றனர். இந்த முறை புதிதாக கராத்தே, செபக்தக்ரா, ரோலர் ஸ்கேட்டிங், டிரையத்லான் போன்ற 8 புதிய விளையாட்டுகளிலும் இந்திய அணியினர் களம் காண உள்ளனர்.
தகுதிச்சுற்று
தடகள அணியில் உள்ள வீராங்கனை டின்டு லூக்கா (800 மீட்டர் ஓட்டப்பந்தயம்), வீராங்கனை நிர்மலா (400 மீட்டர் ஓட்டப்பந்தயம்), வீரர் சேத்தன் (உயரம் தாண்டுதல்) உள்ளிட்ட 11 பேர் தகுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதில் அவர்களது செயல்பாட்டைப் பொறுத்தே இந்திய அணியில் அவர்களது இடம் உறுதியாகும்.
கால்பந்து கிடையாது!
இந்த அணியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய கால்பந்து அணிக்கு சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனமும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
Mobile AppDownload Get Updated News