சென்ற உலகக்கோப்பையில், இறுதிப் போட்டி வரை சென்ற அர்ஜென்டினா அணி ஜெர்மனி அணியிடம் தோல்வியடைந்து, கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக கருதப்படும் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணி இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் அடைந்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி இதுவரை ஒரு கோல் கூட அடிக்காமல் மிகவும் மோசமாக ஆடி வருவது அந்த அணி ரசிகர்களுகுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இன்று நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா அணி நைஜீரியா அணியை எதிர்கொள்கிறது. இதில், வெற்றி பெறும் அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், அர்ஜென்டினா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு இந்தப் போட்டியை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனிடையே, இந்த உலகக்கோப்பைத் தொடருடன் மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என்றும் பலரும் கூறி நிலையில், மெஸ்ஸி அதை மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உலகக்கோப்பை வெல்வது என்பது என்னை உட்பட, எல்லா அர்ஜென்டினா மக்களுக்கும் ஒரு கனவு. உலக அளவில் பல்வேறு கோப்பைகளை வென்றிருந்தாலும், உலகக்கோப்பையை வெல்லும் உணர்வை அனுபவிக்க வேண்டும் என்பது எனது கனவாகும். அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பையை வெல்லாமல் நான் ஓய்வு பெற மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பால், ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஒருவேளை இந்த உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்லாவிட்டாலும், 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பையில் கட்டாயம் பங்கேற்பார் என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.
Mobile AppDownload Get Updated News